Published : 28 Jan 2022 11:45 AM
Last Updated : 28 Jan 2022 11:45 AM

தனியார் நிறுவனங்களில் தமிழகர்களுக்கு கூடுதல் வேலை வழங்கும் சட்டத்தை இயற்றுக: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை வழங்கும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"சென்னை அருகே கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் செயல்பட்டு வரும் எலெக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவனத்தின் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அவர்களின் உரிமைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியதற்காக பணி நீக்கம் மேற்கொண்டு வருகின்றனர். அதைக் கண்டித்து மீண்டும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தொழிலாளர்களை ஆலை நிர்வாகம் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் செயல்பட்டு வரும் எலெக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் தொழிற்சாலை, கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு நிறுவனத்தின் கிளை ஆகும். எளாவூர் தொழிற்சாலையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஆண்டு தோறும் ஊதிய உயர்வு, தீபாவளி திருநாள் போனஸ் உள்ளிட்டவை மறுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த உரிமைகளை வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலாளர்கள் வலியுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து 5 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதைக் கண்டித்து தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்ட நிலையில், கடந்த 13.10.2021 அன்று கும்மிடிப்பூண்டி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜு, பாமக துணைப்பொதுச்செயலாளர் பிரகாஷ், வட்டாட்சியர் மகேஷ், எளாவூர் ஊராட்சித் தலைவர் வள்ளி ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுக்களில் தொழிலாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

ஆனால், அதன்பின்னர் ஆலையின் மூத்த பொதுமேலாளர் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய அதிகாரி பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த சில வாரங்களில், உரிமைகளைக் கேட்டு போராட்டம் நடத்திய தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் 4 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்; தங்களின் உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று எலெக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் தொழிலாளர்கள் கடந்த 24 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தொழிலாளர்களுடன் பேச்சு நடத்த ஆலை நிர்வாகம் மறுத்து வருகிறது. மாறாக,
போராடி வரும் தொழிலாளர்களை மிரட்டி பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி உள்ளூர் தொழிலாளர்களுக்கு மாற்றாக வட இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் ஆலை நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுக்களில் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், இப்போது ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உரிமைகளைக் கோரும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதும், போராடும் தொழிலாளர்களை மிரட்டுவதும், அந்த அநீதிக்கு மக்கள் பிரதிநிதிகள் துணை போவதும் எந்த வகையிலும் நியாயமில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

எளாவூர் எலெக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் தொழிற்சாலை, 40 ஆண்டுகளுக்கு முன் அங்கு செயல்பட்டு வந்த சக்தி பைப்ஸ் ஆலையை கையகப்படுத்தி உருவாக்கப்பட்டது ஆகும். தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலைகள் தமிழக அரசிடமிருந்து ஏராளமான சலுகைகள், உதவிகள், மானியங்களை பெற்று தான் இயங்கி வருகின்றன. ஆனால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணி உத்தரவாதம், ஊதிய உயர்வு, போனஸ் ஆகியவற்றை வழங்க மறுப்பதும், போராடும் தொழிலாளர்களை மிரட்டுவதும் தமிழக அரசுக்கு விடப்படும் சவால் ஆகும். இதை தமிழக முதல்வர் அனுமதிக்கக்கூடாது.

எளாவூர் எலெக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் குறித்த விவாகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட வேண்டும். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அனுப்பி தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி, நீக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்கச் செய்ய வேண்டும். அதை செய்ய எளாவூர் எலெக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் ஆலை மறுக்கும்பட்சத்தில் அதன் மீது தமிழக அரசு சட்டங்களின்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதை தடுக்க தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை வழங்கும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்."

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x