திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் அ.ஜெயா மாரடைப்பால் காலமானார்
திருச்சி: திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் அ.ஜெயா இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.
2011-ல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அ.ஜெயா. எம்.ஏ. பொருளியல் முடித்தவர். இவரது கணவர் எம்.எஸ்.ராஜேந்திரன், அதிமுக வழக்கறிஞர் அணி திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை திருச்சி தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட ஜெயா, சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியில் உள்ள வீட்டுக்கு அவரது உடல் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு அதிமுக திருச்சி மாவட்டச் செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி, வெல்லமண்டி என்.நடராஜன் உட்பட அதிமுகவினர், ஜெயாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
