

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்பு கலந்துரையாடல் வரும் சனிக்கிழமை (ஜன.29) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நாளைய இந்தியாவை வளமானதாகவும். அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டுமென்று விரும்பியவர் மறைந்த அப்துல் கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும் போதெல்லாம் தொடர்ந்து இதனைவலியுறுத்தி வந்தவர். கலாமின் மறைவுக்குப் பின்னர், அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்த வகையில், வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிமன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு, புதுடில்லி டிஆர்டிஓ ‘செப்டாம்’ தலைவர் ஆர்.அப்பாவுராஜ் ஆகியோர் பங்கேற்று, கலந்துரையாட உள்ளனர்.
இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்பான பங்களிப்பு குறித்தும், அப்துல் கலாமோடு இணைந்து பணியாற்றியஅனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் 25 பார்வையாளர்களுக்கு ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். இந்த நிகழ்வில் அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவர்கள் https://www.htamil.org/00220 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளலாம்.