Published : 27 Jan 2022 09:26 AM
Last Updated : 27 Jan 2022 09:26 AM

குடியரசு தின விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவிப்பு

சென்னை: சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பாரிமுனையில் ரிசர்வ் வங்கி உள்ளது. நேற்று இந்த வங்கி வளாகத்தில் ஆர்பிஐ மண்டல இயக்குநர் சுவாமி தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது ஆர்பிஐ அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்கவில்லை.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தியாளர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நிற்காதது குறித்து, அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடந்த டிசம்பர் 17-ம் தேதி தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில், அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ்த் தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் எனவும், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாது எழுந்து நிற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியரசு தினவிழாவின்போது ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நிற்காதது குறித்து உரிய புகார் பெறப்படும்பட்சத்தில், சம்பந்தபட்டவர்கள் மீது அரசு உத்தரவுக்கு கீழ்படியாமல் இருத்தல் பிரிவு (188-ன்)படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கு நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களையும், தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையும் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

கடந்த 2018-ல் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஓன்றில் கலந்துகொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் சர்ச்சையாகி, நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்துநிற்க வேண்டும் என்று ஒரு உத்தரவும் கிடையாது என்றுகூறி, கடந்தடிசம்பர் 10-ம் தேதி வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, கடந்த டிசம்பர் 14-ம் தேதி அரசு மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின்போது அனைவரும் கட்டாயம் எழுந்துநிற்க வேண்டுமென அரசாணைவெளியிடப்பட்டது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x