Published : 27 Jan 2022 08:19 AM
Last Updated : 27 Jan 2022 08:19 AM

நாகை மீனவர்களை தாக்கி ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை: இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

நாகப்பட்டினம்: நாகை மீனவர்களை தாக்கி ரூ.1.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை மீனவர்கள் கொள்ளைஅடித்துச் சென்றனர்.

நாகை ஆரியநாட்டுத் தெரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த குப்புராஜ் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில், அதே ஊரைச் சேர்ந்த வசந்தபாலன்(26), மணிகண்டன்(25), நிர்மல்(24), தில்லைநாதன்(26) ஆகிய 4 மீனவர்கள், கடந்த 24-ம் தேதி மாலை 4 மணியளவில் ஆரியநாட்டுத் தெருவில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் ஆறுகாட்டுதுறைக்கு கிழக்கே 10 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 ஃபைபர் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் வந்தனர். அதில் இருந்த 8 மீனவர்களில் 4 பேர், ஆரியநாட்டுத் தெரு மீனவர்களின் படகில் ஏறி, அவர்களை கட்டை, இரும்பு ராடு மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கினர்.

பின்னர், மீனவர்கள் வைத்துஇருந்த ஜிபிஎஸ் கருவி, 2 செல்போன்கள், 130 கிலோ மீன், பேட்டரி, இன்ஜின், 30 லிட்டர் டீசல், 2 சிக்னல் லைட், ஐஸ் பாக்ஸ், டார்ச்லைட் ஆகியவை உட்பட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துக்கொண்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த வசந்தபாலன், மணிகண்டன், நிர்மல், தில்லைநாதன் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் இரவு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்துசேர்ந்தனர். அவர்களை ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீட்டு,108 ஆம்புலன்ஸ் மூலமாக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல்சிகிச்சைக்காக நாகைஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, வசந்தபாலன், நிர்மல் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து நாகை கடலோர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவலறிந்த மீன் வளர்ச்சிக் கழகத் தலைவரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான கவுதமன் நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதேபோல, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் புஷ்பவனம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x