நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது

நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் மேலும் 4 பேர் கைது
Updated on
1 min read

மதுரையில் நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரை கொலை செய்த வழக்கில் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் மேலும் 4 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரமேஷ் பாண்டி, ராமைய்யா பாண்டியன், வழிவிட்டான், கந்தசாமி ஆகிய 4 பேருடன் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஐவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் 9 பேரையும் வரும் ஜூன் 13-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் ஏ.செல்வம் டி.கோகுல்தாஸ் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து 8 பேர் மதுரை சிறையிலும், ஒருவர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் எஞ்சியவர்களையும் விரைவில் கைது செய்யுமாறு போலீஸாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

வழக்கு கடந்து வந்த பாதை:

மதுரையில் உள்ள ஒரு நாளிதழ் அலுவலகம் மீது 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசியதில் ஊழியர்கள் வினோத், கோபிநாத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அட்டாக்பாண்டி உட்பட 17 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களை 9.12.2009-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் சிபிஐ தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை இழுத்தடித்ததால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் திருச்செல்வம், சரவணமுத்து, முருகன், கந்தசாமி, ரமேஷ்பாண்டி, ரமேஷ்பாண்டியன், வழிவிட்டான், தயாமுத்து, சுதாகர், திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கவும், அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தும் கடந்த பிப்.5-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அட்டாக் பாண்டி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்து ஆஜர்படுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in