

உதகை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தனிமைப்படுத்தி கொண்டதால், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி கொடி ஏற்றினார்.
உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தேசிய கொடியேற்றினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உடனிருந்தார். தொடர்ந்து காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை மாவட்ட வருவாய் அலுவலர் ஏற்றுக் கொண்டார். இந்த அணி வகுப்பில் காவல்துறை, ஊர்காவல் படை, தீயணைப்புத்துறை ஆகியோர் பங்கேற்றனர்.
பல்வேறு துறைகள் மூலம் 94 அதிகாரிகளுக்கு நற்சான்றுகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். தொடர்ந்து விழாவில் தோடர் பழங்குடியின இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது.
இவ்விழாவில், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மோனிகா ராணா உட்பட பலர் கலந்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இன்று காலை முதல் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி கூறியதாவது, “மாவட்ட ஆட்சியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் தனிமைப்படுத்தி கொண்டார். மாவட்ட ஆட்சியருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு விரைவில் வரும்” என்றார்.