முதல் முறையாக புதுச்சேரி, தெலங்கானா இரு மாநிலங்களில் குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் தமிழிசை

முதல் முறையாக புதுச்சேரி, தெலங்கானா இரு மாநிலங்களில் குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் தமிழிசை
Updated on
1 min read

புதுச்சேரி: நாடு முழுவதும் சுதந்திரத்தின விழாவில் முதல்வரும், குடியரசுத்தினவிழாவில் ஆளுநர்களும் அந்தந்த மாநிலங்களில் தேசியக்கொடியேற்றுவது வழக்கம்.

புதுவை மாநிலத்துக்கு தற்போது பொறுப்பு துணைநிலை ஆளுநராக, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதலாக கவனித்து வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு புதுவை துணைநிலை ஆளுநராக இருந்த வீரேந்திரசிங் கட்டாரியா ஜூலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து புதுவை துணைநிலை ஆளுநர் பொறுப்பை அந்தமான் ஆளுநர் ஏ.கே.சிங் கூடுதலாக கவனித்தார். அப்போது 2015ம் ஆண்டு குடியரசு தினவிழாவின் போது ஏ.கே.சிங் அந்தமானில் தேசியக்கொடி ஏற்றினார்.

புதுவையில் நடந்த குடியரசு தினவிழாவில் முதல்வராக இருந்த ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்.அதேபோல் இம்முறை தெலங்கானாவில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆளுநர் தமிழிசை பங்கேற்பார் என்பதால் புதுவையில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இரு மாநிலங்களிலும் குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஆளுநர் தமிழிசை ஏற்ற முடிவு எடுத்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் இம்முடிவை விமர்சித்தனர். புதுச்சேரியில் தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற வேண்டும் என்றனர்.

இந்நிலையில் இன்று காலை தெலங்கானாவில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு தனிவிமானம் மூலம் புதுச்சேரிக்கு ஆளுநர் தமிழிசை வந்தார். அதையடுத்து புதுச்சேரி கடற்கரைச்சாலையில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை தேசியக் கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் பதக்கங்களை வழங்கி கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு ஆளுநர் மாளிகை சென்றடைந்தார்.

முதல் முறையாக இரு மாநிலங்களில் குடியரசுத்தினவிழாவில் தேசியக்கொடியை ஆளுநர் ஏற்றுவது முதல் முறை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in