

விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்வதில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களை தடையின்றிபொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உணவுத்துறை அறி வுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டது. இவற்றை ஜன.31-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரங்களில், நெட்ஒர்க் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைரேகை பதிவு மேற்கொண்டு பொருட்கள் வழங்குவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பொருட்கள் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில்,கைரேகை பதிவு அங்கீகரிக்கப்படாவிட்டாலும், விற்பனை முனைய இயந்திரத்தில் குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்து, பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்பஅட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது நியாயவிலைக் கடைகளில் 4-ம் வாரத்திலும் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.