Published : 26 Jan 2022 08:45 AM
Last Updated : 26 Jan 2022 08:45 AM
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும், கூடுதல் விலை பெறப்படுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. எம்.எஸ்.ஸ்டார் அசோசியேட்ஸ் ஒப்பந்ததாரர் நடத்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு (விழுப்புரம்) சொந்தமான மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த 20-ம் தேதி போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தரமற்ற, சுகாதாரமற்ற உணவு வழங்கியது, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, ஒப்பந்ததாரருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால், கடந்த 25-ம் தேதி விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குநர் தலைமையில் மீண்டும் ஆய்வு மேற்கண்டபோது, அந்த உணவகத்தில் குறைபாடுகள் ஏதும் சரி செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், 25-ம் தேதி (நேற்று) முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT