Last Updated : 25 Jan, 2022 05:47 PM

 

Published : 25 Jan 2022 05:47 PM
Last Updated : 25 Jan 2022 05:47 PM

இரவு ஊரடங்கு: வியாபாரிகள் வருகை குறைவால் ஈரோடு ஜவுளி வர்த்தகம் கடும் பாதிப்பு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே செயல்படும் ஈரோடு ஜவுளிசந்தை வியாபாரிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

ஈரோடு: இரவு நேர ஊரடங்கால் ஈரோடு ஜவுளிச்சந்தைக்கு வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இரு தினங்கள் நடைபெறும் ஜவுளி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளிச்சந்தை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே இந்திய அளவில் புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது. இங்கு தினசரி மற்றும் வார சந்தையும் நடைபெறுகிறது. வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் தமிழகம் முழுவதும் மட்டுமன்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் வியபாரிகள் ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம்.

இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் பொங்கல் சீசன் விற்பனை மட்டுமின்றி வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தை விற்பனையும் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஈரோடு ஜவுளிச்சந்தை வியாபாரிகள் கூறுகையில், ''இந்த வாரத்திற்கான வாரச்சந்தை திங்கள் கிழமை இரவு கூடியது. எனினும், இரவு நேர ஊரடங்கு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. இரவில் தான் ஜவுளி வர்த்தகம் களை கட்டும். இரவு நேர ஊரடங்கு காரணமாக மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்ட வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் கடந்த வாரத்தை விட குறைவாகவே நடைபெற்றது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 5 சதவீதம் சில்லரை வியாபாரம் மட்டுமே நடைபெற்றது. இதே நிலைமை வரும் வாரங்களிலும் தொடரும்.

பொதுவாக ஜவுளி சந்தை நாட்களில் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இரவு நேரங்களில் தான் வியாபாரிகள் பயணம் மேற்கொள்வர். இரவு நேர ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வர முடியவில்லை. இந்த வாரம் மட்டுமின்றி கடந்த மூன்று வாரமாக இதே நிலை தான் உள்ளது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x