Published : 25 Jan 2022 04:20 PM
Last Updated : 25 Jan 2022 04:20 PM

தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு: தடுத்து நிறுத்திட பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கோப்புப் படம்

சென்னை: சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை ஏலம் விட இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடுவதற்கான அறிவிப்பு துரதிஷ்டவசமானது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரசனைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்கள் மத்தியில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள மீட்க இயலாத 125 தமிழக மீன்பிடிப் படகுகளை அப்புறப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் வழிமுறைகளை இறுதி செய்வதற்கு ஒரு தொழில்நுட்பக் குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் மீன்பிடிப் படகுகளை ஆய்வு செய்து, அப்புறப்படுத்துவதை மேற்பார்வையிடவும், விற்பனை வருவாயை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பவும், தமிழகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, அவர்களின் இலங்கை பயண விவரங்களையும் மத்திய வெளியுறவுத் துறைக்குத் தெரிவித்துள்ளது.

இத்தகைய சாதகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை, இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளதாக இலங்கை மற்றும் தமிழ்நாட்டிலுள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய அரசுடன் இலங்கை அரசு முறையாக கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் ஏலத்தை நடத்த அவசரம் காட்டுவது, வாழ்வாதாரத்தை இழந்த தமிழக ஏழை மீனவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்திய தூதரகமும், தமிழக அரசும் மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாதிக்கும்.

இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு பல்வேறு துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் அனைத்தும் இலங்கையிலுள்ள பல்வேறு நீதிமன்றங்களால் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே விடுவிக்கப்பட்டுள்ளன.

எனவே, தமிழக மீனவர்களின் படகுகளை, எவ்வித சட்டபூர்வமான உரிமையும் இல்லாத இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத் துறை ஏலம் விட உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தைத் திரும்பப் பெற வேண்டும். இந்திய அரசின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் கொண்டு இலங்கை அரசுக்கு இது தொடர்பாக இந்திய அரசின் மறுப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இந்தச் சூழ்நிலையில், 2018 ஆம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுதுபார்க்க இயலாதெனக் கருதப்படும் 125 தமிழகப் படகுகளை ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர வேண்டும். இலங்கை கடற்படையினரால் 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்விகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிடவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x