Published : 25 Jan 2022 01:58 PM
Last Updated : 25 Jan 2022 01:58 PM

'கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் தேவை' - சென்னையில் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடந்த போராட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், நடிகர் செந்தில் மற்றும் கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில், 'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு எந்தவித பாரபட்சமுமின்றி உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்', 'தவறும் பட்சத்தில் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்' என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சிபிஐ விசாரணை வேண்டும்: தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும்போது, "தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் பெற்றோர் மற்றும் அந்த குழந்தையின் வீடியோவை ஆதாரமாக எடுத்துக் கொண்டால், மிகத் தெளிவாகத் தெரியும், குழந்தைக்கு அந்தப் பள்ளியில் கொடுத்த டார்ச்சருக்குக் காரணமே, தான் பிறந்த மதத்திலிருந்து மாறமாட்டேன் என சொல்லியதால், அதற்கு கட்டாயப்படுத்தியதுதான் காரணம் என்பது தெரியவருகிறது. எனவேதான் சிபிஐ போன்ற சுதந்திரமான அமைப்பு இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். முழு உண்மையும் வெளியே வர வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறுவதையோ, நான் கூறுவதையோ எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தை சுதந்திரமான விசாரணை அமைப்பிடம் கொடுத்து அவர்கள் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள மக்களின் விருப்பமாக உள்ளது. இந்தியாவில் மூன்று, நான்கு மாநிலங்களில் இந்த சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு முறையும் நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டுவர கட்டாயப்படுத்துகின்றன. இனிவரும் காலத்தில் இந்தச் சட்டம் கட்டாயம் கொண்டு வரவேண்டும், வரும் என்பது எங்களது எதிர்பார்ப்பு.

தமிழக காவல்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், காவல்துறையின் கட்டுப்பாடு அரசியல்வாதிகளிடம் சென்றுவிட்டது அதனால்தான் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு காவல் நிலையத்தையும் பாருங்கள், கொலைக்குற்றங்கள் அதிகமாகிவிட்டது. தமிழக காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை, ஆனால் இவர்கள் அந்த அதிகாரிகளை சரியாக வேலை செய்யவிடமாட்டார்கள் என்பதால்தான் நாங்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தூய இருதய மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில் 'எனது மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ”மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த 23-ம் தேதி மாணவியின் பெற்றோர் தஞ்சாவூரில் நீதிபதி பாரதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

பின்னர் மாணவியின் பெற்றோர் வாக்குமூலத்தை பெற்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தவில், மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்தாக கூறப்படும் வீடியோ உண்மையானது தானா என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிப்படுத்த வேண்டியதுள்ளது. இதனால் அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் இன்று காலை 10 மணிக்கு வல்லம் முகாம் அலுவலகத்தில் டி.எஸ்.பி. பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த செல்போனை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று காலை வல்லம் டி.எஸ்.பி. பிருந்தா முன்பு, மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா, அரியலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் உறுப்பினர் முத்துவேல் ஆகியோர் ஆஜராகினர். பின்னர் மாணவியின் தந்தை முருகானந்திடமும், சித்தி சரண்யாவிடமும் தனித்தனியாக டிஎஸ்பி பிருந்தா விசாரணை மேற்கொண்டார்.அவர்கள் கொடுத்த பதில்களை அப்படியே வீடியோ பதிவு மூலமும் எழுத்து பூர்வமாகவும் போலீஸார் பதிவுச் செய்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x