Published : 25 Jan 2022 09:13 AM
Last Updated : 25 Jan 2022 09:13 AM

ஆவினில் தவறான வழிமுறையில் 236 பேர் பணி நியமனம்: விசாரணை நடப்பதாக அமைச்சர் நாசர் தகவல்

காரைக்குடி: ஆவின் நிறுவனத்தில் தவறான வழிமுறையில் 236 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடந்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அமைச்சர்கள் நாசர், கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பிறகு அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆவின் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், நுகர்வோர் பிரச்சினையை நேரில் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதிமுக ஆட்சியில் ஆவின் பால் உற்பத்தி 36 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது அது 41 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அதேபோல் 26 லட்சம் லிட்டராக இருந்த பால் விற்பனை தற்போது 28 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

கடந்த ஆட்சியில் ஆவினில் பல்வேறு விதமாக ஊழல்கள் நடந்துள்ளன. அவை களையப்படும். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 8 ஒன்றியங்களில் இருந்து அனுமதியின்றி ஸ்வீட் பாக்ஸ்களை எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல் 236 பேரை தவறான முறையில் பணி நியமனம் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சங்கங்களுக்கு பட்டாசு வாங்கியதிலும் ஊழல் செய்துள்ளார்.

முதல்வர் ஆலோசனை பெற்று நாட்டு மாடு பால் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஆவின் பொருட்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது கிழக்கு ஆசிய நாடுகள், மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளோம். முதற்கட்டமாக 7 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் தொடங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x