Published : 24 Jan 2022 08:12 AM
Last Updated : 24 Jan 2022 08:12 AM

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வு: விண்ணப்பங்களை இன்று முதல் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றலாம்

சென்னை: கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வு விண்ணப்பங்களை இன்று (ஜன. 24) முதல் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு மார்ச் 5-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 12-ம் தேதி தொடங்கியது. தற்போது மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் பதிவுசெய்து வருகின்றனர். விண்ணப்பங்களை சமர்பிக்க வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில், பதிவுசெய்த மாணவர்களின் விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று முதல் பிப்ரவரி 5 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதேபோல, மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை http://www.karuvoolam.tn.gov.in/ என்ற வலைதளம் வழியாக செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும். பணி விவர அறிக்கையை பிப்ரவரி 9-ம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத் துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x