Published : 24 Jan 2022 08:12 AM
Last Updated : 24 Jan 2022 08:12 AM
சென்னை: கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வு விண்ணப்பங்களை இன்று (ஜன. 24) முதல் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு மார்ச் 5-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 12-ம் தேதி தொடங்கியது. தற்போது மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் பதிவுசெய்து வருகின்றனர். விண்ணப்பங்களை சமர்பிக்க வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில், பதிவுசெய்த மாணவர்களின் விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று முதல் பிப்ரவரி 5 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதேபோல, மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை http://www.karuvoolam.tn.gov.in/ என்ற வலைதளம் வழியாக செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும். பணி விவர அறிக்கையை பிப்ரவரி 9-ம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத் துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT