Published : 24 Jan 2022 08:35 AM
Last Updated : 24 Jan 2022 08:35 AM

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு கள்ளச்சந்தை சட்டத்தில் ஒருவருக்கு சிறை

திருவள்ளூர்: ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டு, ஆந்திர பகுதிக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.அந்த வகையில், கடந்த டிசம்பர் 28-ம் தேதி, கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் திருவள்ளூர் அலகு போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையின் போது, தமிழகப் பகுதியிலிருந்து, லாரி ஒன்றில் ஆந்திராவுக்கு கடத்த இருந்த 21 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், அக்கரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கைய்யா( 27) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் பரிந்துரையின் பேரில், வெங்கைய்யாவை, கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி, வெங்கைய்யா புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x