Published : 24 Jan 2022 10:17 AM
Last Updated : 24 Jan 2022 10:17 AM

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் விருது

திருநெல்வேலி

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,924 வாக்குச் சாவடிகளும் ஜிஐஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் முறையாக கண்காணிக்கப்பட்டது. வாக்காளர்கள் முதல் தேர்தலில் பணியாற்றிய தேர்தல் அலுவலர் கள் வரை அனைவரும் பயன் பெறும் வகையில், வாக்குச்சாவடி வழிகாட்டி என்ற இணையதள அமைப்பு திருநெல்வேலி மாவட்ட தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் தங்கள் இருப்பிடத்திலிருந்து தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டிய வழிகளை தெளிவாக பார்த்து அறிய முடிந்தது.

மேலும், 360 கோண பரிணாமத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளின் உட்புறத் தோற்றத் தையும் இணையதளம் வழியாக எளிதாக பார்க்க முடிந்தது. இந்த புதிய அமைப்பானது வாக்காளர்களுக்கு மட்டுமின்றி தேர்தல் பார்வையாளர்களுக்கும், நுண் பார்வையாளர்களுக்கும், வாக்குச் சாவடிகளில் பணியாற் றும் தேர்தல் பணியாளர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது.

சமூக ஊடகங்களில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்தை கண்காணிக்கும் விதமாக தேர்தல் - சமூக ஊடகங்களை கண்காணிக்கும் அமைப்பு என்ற புதிய இணைய தள அமைப்பின் மூலம் அனைத்து வேட்பாளர்களின் சமூக ஊடக கணக்குகள் கண் காணிக்கப்பட்டன. அவதூறு பேச்சு, பொய்ப் பிரச்சாரம், தேர்தல் செலவுகள் மற்றும் தேர்தல் நடத்தை விதி மீறல் போன்ற தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து விதி முறைகளும் கடுமையாக கண்காணிக்கப்பட்டன.

கணினி தொழில்நுட்பத்தில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை தேர்தலுக்காக முன்மாதிரியாக கையாண்டதை பாராட்டும் விதமாக திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷ்ணுவுக்கு தேசிய வாக்காளர் தினமான, வரும் 25-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்கி பாராட்ட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x