கிரானைட் முறைகேடு வழக்கை யாரிடம் ஒப்படைப்பது: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கிரானைட் முறைகேடு வழக்கை யாரிடம் ஒப்படைப்பது: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

அரசின் அறிக்கைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும்

சட்டவிரோத கிரானைட் முறைகேடு வழக்கை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பாக சிபிஐ தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கைப் பொருத்தமட்டில் தமிழக அரசு தாக்கல் செய்யும் அறிக்கைக்குப் பிறகே மற்ற முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி கடந்த 2014-ல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘‘மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி, தமிழகத்தில் சட்டவிரோத கனிம வளக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் எனவும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும்” கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக மட்டும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்து உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சகாயம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகாரிகள் துணையுடன் கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாகவும், அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரவதனம், ‘மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிக்கை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிவிட்டதால், அதனை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

சகாயம் தரப்பில் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜரானார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள், “இதுதொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிடுவதா? அல்லது சிபிஐ-க்கு உத்தரவிடு வதா? என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசு சார்பிலும் ஒரு அறிக்கை தாக்கல் செய்வதாக கூறப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தாக்கல் செய்யும் அந்த அறிக்கைக்குப் பிறகே இந்த வழக்கை யாரிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்படும். இருந்தாலும் இதுகுறித்து சிபிஐ-யும் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்” எனக்கூறி வழக்கை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in