Published : 23 Jan 2022 06:56 AM
Last Updated : 23 Jan 2022 06:56 AM

திருப்போரூர் கோயில் சொத்துகளை மீட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்போரூர் கந்தசாமி மற்றும் ஆளவந்தான் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளை மீட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் கோயிலுக்குச் சொந்தமான, ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துகளை அபகரிக்க 20-க்கும்மேற்பட்ட குழுக்கள் முயற்சித்து வருவதாகவும், அதை தடுத்து, கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டுமென வழக்கறிஞர் ஜெகந்நாத் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் கோயில் சொத்துகளை மறுஉத்தரவு வரும்வரை யாருக்கும் பத்திரப் பதிவு செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை சார்பில், அந்த கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுவரை சுமார் 19.71 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய சொத்துக்கள் வரும் ஏப். 13-ம் தேதிக்குள் மீட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதைப் பதிவு செய்த நீதிபதிகள், கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகள் மீட்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x