Last Updated : 22 Jan, 2022 06:10 PM

 

Published : 22 Jan 2022 06:10 PM
Last Updated : 22 Jan 2022 06:10 PM

'கல்விக்காக தருவதில் மகிழ்ச்சி' - காட்டுமன்னார்கோவில் அரசு கலைக் கல்லூரிக்கு நிலத்தை தானமாக தந்த தொழிலதிபர்கள்

கடலூர்: கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே அரசு கலைக் கல்லூரிக்காக 3 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தொழிலதிபர்களுக்கு அதிகாரிகள் மற்றும் குமராட்சி பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

காட்டுமன்னார்கோவில் வட்டப்பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். இங்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு அப்போது காட்டுமன்னார்கோவில் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த முருமாறன் முயற்சியல் காட்டுமன்னார்கோவிலில் அரசு கலைக் கல்லூரி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிக்கு டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று பெயரிடப்பட்டு காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது. மேலும், கல்லூரிக்கு கட்டிடம் கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் காட்டுமன்னார்கோவில் வட்ட பகுதி மற்றும் வெளி மாவட்டத்திலிருந்தும் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரிக்கு போதுமான இடம் பள்ளியில் இல்லாததால் நெருக்கடியில் கல்லூரி நடத்தப்பட்டு வந்தது.

இந்தக் கல்லூரிக்கு கடந்த 3 ஆண்டுகளாக இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்தது. காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் கல்லூரிக்கு ஏற்ற இடம் தேடும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், சரியான இடம் கிடைக்காமல் கல்லூரி கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனையறிந்த சிதம்பரத்தில் ஹோட்டல் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வரும் சகோதரர்களான தொழிலதிபர்கள் சேதுராமன், கேதார்நாதன், சுவேதகுமார் ஆகியோர் குமராட்சி அருகே உள்ள கீழவன்னியூர் கிராமத்தில் அவர்களுக்கு சொந்தமாக உள்ள 3 ஏக்கர் நிலத்தை தானமாகத் தருவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இதனையொடுத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கீழவன்னியூரில் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர். இந்த நிலையில் தொழிலதிபர்கள் சேதுராமன், கேதார்நாதன், சுவேதகுமார் ஆகியோர் அவர்களது பராமறிப்பில் இருந்த புறம்போக்கு நிலம் 1 ஏக்கர் 20 சென்டடையும், அவர்களுக்கு சொந்தமான 3 ஏக்கரையும் சேர்த்து மொத்தம் 4 ஏக்கர் 20 சென்ட் நிலதை அரசு கலைக் கல்லூரி கட்டுவதற்கு வழங்க ஒப்புதல் அளித்தார். அதனடிபடையில் குமராட்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் தொழிலதிபர் கேதார்நாதன் அந்த நிலம் அரசுக்குப் பத்திரப்பதிவு செய்து தந்தார். குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் மற்றும் ஊராட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

ஏழை மாணவர்களின் கல்விக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கிய தொழிலதிபர்கள் சேதுராமன், கேதார்நாதன், சுவேதகுமார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குமராட்சி பொதுமக்கள், அரசு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து தொழிலதிபர் கேதார்நாதன் கூறுகையில், "காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகள் மிகவும் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி கீழவன்னியூர் எங்கள் சொந்த கிராமம், எங்களது மூன்னோர்கள் ஏழை மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை வழங்கியது உள்ளிட்ட பல உதவிகளை செய்துள்ளனர். அந்த வகையில், கல்விக்காக இந்த நிலத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x