Published : 22 Jan 2022 12:26 PM
Last Updated : 22 Jan 2022 12:26 PM

விபத்தில் காயமடைந்து மூளையில் ரத்தக்கசிவு: உயிர்பிழைத்த சிறுவனிடம் போனில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளையில் அடிபட்டுஉயிர்பிழைத்த சிறுவனிடம் போனில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்.

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' அரசு திட்டம் மூலம் உயிர்பிழைத்த சிறுவனிடம் போன் மூலம் கலந்துரையாடி முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் அடிபட்டு உயிர்பிழைத்த சிறுவனிடம் நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். அப்போது, ''தம்பி ஸ்டாலின் பேசுறேன். நல்லாயிருக்கியா, வலி இருக்குதா. தைரியமா இரு, எப்படி விபத்து ஏற்பட்டது'' என்றும், ''மருந்துகள் கொடுத்திருக்கிறாங்களா'' என்றும் கேட்டறிந்தார். ''ஏதேனும் வேண்டுமென்றால் எம்.பி ராஜேஸிடம் தெரிவிக்கவும்'' என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது முதல்வரிடம் பேசிய சிறுவனின் தாயார் தங்களது மகனை காப்பாற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங். இ.ஆ.ப., நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் சிறுவன் சு.வர்ஷாந்த் உடன் இருந்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறுவன் வர்ஷாந்துக்கு பழங்கள், சத்துமிகுந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.

விபத்து விவரம்: நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டி, வசந்தபுரம் அருகில் உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வர்ஷாந்த் (வயது 13), 13.1.2022 அன்று பொங்கல் திருநாளுக்கு பயன்படுத்தும் பூலப்பூவை விற்றுவிட்டு, தனது தந்தை, தாய் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மோதி இரவு 7.00 மணியளவில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தாய், தந்தை இருவருக்கும் பாதிப்பு இல்லை. விபத்தில் சிறுவன் வர்ஷாந்த்க்கு தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இரவு 7.50 மணியளவில் சேர்க்கப்பட்டார்.

நாமக்கல் தனியார் மருத்துவ மனையில் அரசு திட்டத்தின்மூலம் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறுவன் வர்ஷாந்துக்கு பழங்கள், சத்துமிகுந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.

சிகிச்சை விவரம்: இந்த மருத்துவமனையில் முதல்வரின் சிறப்பு திட்டமான 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டார்கள். சிறுவன் வர்ஷாந்த்துக்கு தலையில் அடிபட்டதால், அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது. 12 மணி நேரம் கழித்து மூளையில் ரத்தக் கசிவு அதே அளவில் உள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதற்காக மீண்டும் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. ரத்தக் கசிவும், மூளை அழுத்தமும் அதிகமானதால் அன்றே நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் (நியூரோ சர்ஜன்) மருத்துவர் பாலசுப்பிரமணியன், மருத்துவர்.ஷியாம்சுந்தர் உள்ளிட்ட குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொணன்டர். இதன்மூலம் ரத்தக் கசிவு அகற்றப்பட்டது.

விபத்தில் சிக்கிய சிறுவன் வர்ஷாந்துக்கு உடனடியாக சிகிச்சை, பரிசோதனை அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உயிர் காக்கப்பட்டார். தற்போது செல்வன் வர்ஷாந்த் தெளிவாக நல்ல நிலையில் உள்ளார். இவர் சிகிச்சை முடித்து தற்போது பொட்டிரெட்டிபட்டி மண்கரடு பகுதியில் உறவினர் வீட்டில் உள்ளார். சிகிச்சை குறித்து மருத்துவர் தெரிவிக்கையில், ''சாலை விபத்தில் பாதிக்கப்படக்கூடிய ஏழை நோயாளிகளுக்கு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் - மிகப் பெரிய நன்மை பயக்கும். மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் இத்திட்டத்தில் அனுமதி அளித்து திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x