Published : 22 Jan 2022 12:17 PM
Last Updated : 22 Jan 2022 12:17 PM

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையா? - தமிழக அரசு விளக்கம் தர ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினைகளை சந்திக்கிறோம் என மத்திய அரசு கூறியிருப்பதற்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினைகளை சந்திக்கிறோம்; அதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன; முதல்வர் இத்திட்டங்களை ஆய்வு செய்து, ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசு மீது மத்திய நெடுஞ்சாலைத் துறை இத்தகைய குற்றச்சாட்டை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கூறியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழகம் ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடுமையானது. இதுகுறித்த உண்மை நிலையை தமிழக அரசு விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் மிகவும் அவசியமானவை. நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடக்காமல் விரைந்து செயல்படுத்தி முடிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். எந்தத் திட்டப் பணிகளும் நிறுத்தி வைக்கப்படக்கூடாது.

சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச்சாலை உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் என்பதால் அத்திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் கூட, அதை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும்; அத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x