Last Updated : 22 Jan, 2022 11:22 AM

 

Published : 22 Jan 2022 11:22 AM
Last Updated : 22 Jan 2022 11:22 AM

திருவையாறு தியாகராஜர் 175-வது ஆராதனை விழா: கலைஞர்கள் இசை அஞ்சலி

தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 175-வது ஆராதனை விழாவை முன்னிட்டு நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் இசை கலைஞர்கள் பங்கேற்று இசையஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி நினைவிடத்தில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா ஐந்து நாட்களுக்கு வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழாவிற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி பந்தல்கால் நடப்பட்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக, ஒருநாள் நிகழ்ச்சியாக நடத்த சபா சார்பில் திட்டமிடப்பட்டது.

அதன்படி, இன்று (22-ம் தேதி) காலை 6:30 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி முக்கிய வீதி வழியாக தியாகராஜர் நினைவிடத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து விழாவினை சபா தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கிவைத்தார். ​பந்தலில் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு, மங்கள இசை துவங்கியது. தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தன. சரியாக 9 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை, பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் துவங்கியது. தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'லாதிஞ்சநெ ஓ மநஸே...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இதில் மஹதி, விசாகாஹரி, கடலுார் ஜனனி, சுசித்தரா, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ் உள்பட ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்துகொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும், நாதஸ்வர கச்சேரி, பின் உபன்யாசம் நடந்தது. இரவு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

விழா நடைபெறும் இடத்திற்கு வந்த இசைக் கலைஞர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் தெர்மல் மீட்டர் கொண்டு சோதனை செய்த பிறகே அமைதிக்கப்பட்டனர். கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குறைந்தளவிலான நபர்களை அனுமதிப்பட்டு இருந்தனர். பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x