Published : 22 Jan 2022 08:02 AM
Last Updated : 22 Jan 2022 08:02 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் காப்பு தொகை உயர்வு: மாநகராட்சி வார்டு வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிர்ணயம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள விவரங்களின்படி, இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி வேட்பாளர்கள் செலுத்தவேண்டிய காப்புத் தொகை(டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம்,நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புதொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர் போட்டியிட்டால் மேற்கூறிய தொகையில் பாதி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும்அதுதொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ, டிஜிட்டல் பேனர்களோ, கட்அவுட்களோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறை ஒலிபெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் கைபேசி பயன்படுத்ததடை விதிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x