Published : 22 Jan 2022 07:53 AM
Last Updated : 22 Jan 2022 07:53 AM

மதமாற்ற வற்புறுத்தலால் மாணவி தற்கொலையா? - தனியார் பள்ளி மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழக டிஜிபி-க்கு கடிதம்

சென்னை: தஞ்சாவூரில் தனியார் பள்ளி மாணவியை மதம் மாற வற்புறுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத் தலைவர் பிரங்க் கனூங்கோ, தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ஜன.20-ம் தேதி எங்களுக்கு வந்த புகார் ஒன்றில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ - மாணவியரை சட்டவிரோதமாக மத மாற்றத்தில் ஈடுபடுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மதம் மாற்றத்தை ஏற்க மறுக்கும் மாணவ - மாணவியரை பள்ளி நிர்வாகம் உளவியல்ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கி, அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் எங்களுடைய கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உரிமை மீறலா?

மேலும், அப்பள்ளியில் பயிலும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர், மதம் மாற மறுப்பு தெரிவித்ததால் அவரை வீட்டுக்கு அனுப்பாமல் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தும், பாத்திரங்களை கழுவசொல்லியும் தண்டனை வழங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அம்மாணவி பூச்சி மருந்தைக்குடித்து தற்கொலைக்கு முயன்றசம்பவம் எங்களுடைய கவனத்துக்கு வந்துள்ளது. பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அப்பள்ளி நிர்வாகம் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களில்ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

7 நாட்களுக்குள் அறிக்கை

இந்நிலையில், சம்பந்தபட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மீது உரிய விசாரணை நடத்தி, குழந்தைகளின் உரிமைகளை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ - மாணவியரிடம் புகாரைப் பெற்று அதன் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். மேலும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கையாக ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x