Published : 22 Jan 2022 10:27 AM
Last Updated : 22 Jan 2022 10:27 AM

ஜவ்வாதுமலை அருகே பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலை யில் உள்ள நம்மியம்பட்டு கிராமத்தில் பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நம்மியம்பட்டு கிராமத்தையொட்டி அமைந்துள்ள மலையின் முகட்டில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்டிருந்த பாறை ஓவியங்கள் இருந்தன. மலை முகட்டில் கிழக்குப்புறமாக, அருகருகே உள்ள இரண்டு குகைத் தளத்தில் 5-க்கும் மேற்பட்ட வெண்சாந்து நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

மேலும், பாறை ஓவியங்களை ஆய்வு செய்துள்ள தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல் ஓவியத்தில் உருவத்தில் சில வடிவங்கள் ஒருங்கே உள்ளது. அது ஒருவரின் தலை அலங்காரமாக இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வடிவத்தை வேட்டை தொடர் பான நிகழ்வுகளுடன் பொருத்தியும் பார்க்கலாம்.

இரண்டாம் ஓவியத்தில் மனித உருவம் போல தோற்றம் கொண்ட காட்சிகள் வரையப்பட்டுள்ளதை காணமுடிகிறது. அதில் கையை விரித்த நிலையில் இருப்பது போலவும், ஒரு கையில் ஏதோ ஒன்று வைத்திருப்பது போலவும் உள்ளது. மூன்றாவது உருவத்தில் ஒரு மனித உருவம், நீண்ட தலைப்பாகை போன்ற தோற்றத்துடன் ஒரு கையில் ஆயுதம் ஒன்றை தூக்கிக் கொண்டு நடந்து செல்வது போல காணமுடிகிறது.

நான்காம் உருவத்தில் மனித உருவம் போல ஒன்று காணமுடிகிறது. ஒரு கையில் நீண்ட குச்சி போன்ற ஆயுதம் வைத்திருப்பது போல் உள்ளது. அதற்கு முன் மிக அழிந்த நிலையில் மாடு போன்ற விலங்கின் தோற்றம் தெளிவற்ற நிலையில் உள்ளது. அதன் கீழே மனித உருவம் போன்ற ஒன்று கையில் குச்சி போன்ற ஆயுதம் தூக்கி நடந்து செல்வது போல உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஆவணப்படுத்த வேண்டும்

ஜவ்வாதுமலையில் காணப் படும் இவ்வோவியங்கள், மழையின் காரணமாகவும், மக்களின் அறியாமையின் காரணமாகவும் சேதமடைந்துள்ளன. பழந்தமி ழர்கள் வாழ்வியலுக்கு சான்றாக திகழும், பாறை ஓவியங்களை எதிர்கால தலைமுறைகள் காணும் வகையில் பாதுகாத்து ஆவணப் படுத்த வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x