Published : 21 Jan 2022 04:07 PM
Last Updated : 21 Jan 2022 04:07 PM

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு: வெளியூர் பயணிகளுக்காக வாடகை வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி

சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைமுறைப்படுத்தப்படும் முழு ஊரடங்கின்போது மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களிலிருந்து செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.30 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 12-1-2022-ன்படி, கடந்த 16-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 23-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.

மேலும், வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அரசு கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x