

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஅரங்கத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில், சுவாமி விவேகானந்தா சபாகிரகம் என்னும் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தலைமையும், விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலையும் வகித்தனர். பொதுச்செயலாளர் பானுதாஸ் வரவேற்று பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கலையரங்கத்தையும், `அன்னபூரணா’ என்ற உணவருந்தும் கூடத்தையும் திறந்து வைத்தார். நிவேதிதா பீதி எழுதிய, ‘இந்திய கலாச்சாரமும் சவால்களும்’ என்ற நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, மோகன் பாகவத் பெற்றுக் கொண்டார்.
வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சைதன்யானந்த மகராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழா அரங்கத்தில் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவுநபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சிக்குப் பின்பு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மோகன் பாகவத் ஆகியோர், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றனர்.