Last Updated : 20 Jan, 2022 06:57 PM

 

Published : 20 Jan 2022 06:57 PM
Last Updated : 20 Jan 2022 06:57 PM

பண்ருட்டியில் திருமண வரவேற்பின்போது மணமகள் நடனம்: மாப்பிள்ளை அடித்ததால் மணமகனை மாற்றிய மணமகள்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே திருமண வரவேற்பின்போது மணமகள் நடனமாடியதை விரும்பாத மணமகன், அவரை அறைந்ததால், மணமகள் தனது முறை மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு பெண் அழைப்பு நடைபெற்றபோது, மணப்பெண், தனது உறவினர்களுடன் நடனமாடிக் கொண்டு, மண்டபத்திற்கு வந்துள்ளார். இதை விரும்பாத மணமகன், மணமகளிடம் சென்று ஏன் இப்படி செய்கிறாய் எனக் கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மணமகளைக் கன்னத்தில் அறைய, அவரும் பதிலுக்கு அறைந்தார்.

இதைக் கண்ட மணமகளின் தந்தை, திருமணத்திற்கு முன்னரே என் மகளை எப்படி அடிக்கலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், ‘உனக்கு எனது மகளைத் திருமணம் செய்துகொடுக்க விருப்பமில்லை. எனவே மண்டபத்தை விட்டு வெளியே செல்’ என்று கூறியுள்ளார். மணமகளும் இதையே கூறியுள்ளார். இதையடுத்து நிச்சயிக்கப்பட்ட மணமகன் அங்கிருந்து வெளியேறினார்.

இதையடுத்து மணமகளின் தந்தை, உறவினர்களுடன் கலந்து பேசி, செஞ்சியைச் சேர்ந்த முறை மாப்பிள்ளையுடன், நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை பண்ருட்டி திருவதிகை கோயிலில் முறை மாப்பிள்ளையுடன் மணப்பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்றது.

அண்மைக்காலமாக கேரளாவில் திருமண நிகழ்வின்போது, மணப்பெண்கள் நடனமாடுவது வழக்கமாகி வருவதும், அதுபோன்ற சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதை அறிந்த தற்காலத் தலைமுறையினர் அதில் ஈடுபாடு கொண்டு, நவீன காலத்திற்கேற்ப மாறிவருகிறார்கள். இது ஒரு பெரிய விஷயமல்ல. இது ஏன் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்குப் புரியாமல் போனது என திருமண நிகழ்விற்கு வந்திருந்தவர்கள் முணுமுணுத்துக் கொண்டே சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x