Last Updated : 20 Jan, 2022 05:36 PM

 

Published : 20 Jan 2022 05:36 PM
Last Updated : 20 Jan 2022 05:36 PM

முன்ஜாமீன் பெற்றவர்கள் செலுத்திய ரூ.2.85 லட்சம்: இஎஸ்ஐ மருத்துவமனையில் 28 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வசதி

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் கிடைத்த நிதியைக் கொண்டு கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 28 படுக்கைகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்சிஜன் இணைப்பு வசதி | படம்:ஜெ.மனோகரன்.

கோவை: வழக்குகளில் ஜாமீன் பெற நிபந்தனையாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உயர் நீதிமன்றம் செலுத்த உத்தரவிட்ட ரூ.2.85 லட்சத்தைக் கொண்டு 28 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் அலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் படுக்கை வசதி தேவைப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு, தனியார் பங்களிப்புடன் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில்,7 வெவ்வேறு வழக்குகளில் முன்ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்க நிபந்தனையாக, கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கரோனா நிதி அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி உத்தரவிட்டார்.

அதன்மூலம், இஎஸ்ஐ மருத்துவமனைக்கு இதுவரை மொத்தம் ரூ.2.85 லட்சம் கிடைத்துள்ளது. இந்த நிதியைக் கொண்டு மருத்துவமனையில் 28 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் இணைப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் டாக்டர் ரவீந்திரன் கூறியதாவது:

“தொற்றால் பாதிக்கப்பட்டு அறிகுறிகள் இல்லாதவர்கள் கொடிசியாவிலும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய இணை நோய்களுடன் மிதமாக பாதிப்பு உள்ளவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையிலும், மற்ற இணை நோய்களுடன் தீவிர பாதிப்பு உள்ளவர்கள் கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் 43 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கரோனா சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் 550 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது புதிதாக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொடிசியாவில் கடந்த முறை பயன்படுத்தப்பட்ட படுக்ககைகளை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டோம். இந்த 200 படுக்கைகளில் 28 படுக்கைகளுக்கு, உயர் நீதிமன்றம் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு ஆக்சிஜன் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கான்சன்ரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது’’.

இவ்வாறு மருத்துவமனையின் டீன் டாக்டர் ரவீந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x