Published : 20 Jan 2022 03:54 PM
Last Updated : 20 Jan 2022 03:54 PM

இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக கருத்துகளை வெளியிட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட கவிஞர் லீனா மணிமேகலை, பின்னணிப் பாடகி சின்மயிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ‘‘மி டூ’’ ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். இது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கிடையில் லீனா மணிமேகலையின் முடக்கப்பட்ட பாஸ்போர்ட் விடுவிக்கப்பட்டது மற்றும் தனது அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசிகணேசன் இணைவது போன்ற விவகாரங்கள் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலையும், சின்மயியும் கருத்துகளைப் பதிவிட்டனர்.

உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தனக்கு எதிராக லீனா மணிமேகலையும், பின்னணிப் பாடகி சின்மயியும் பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும், ((தி நியூஸ் மினிட்)) இணையதளச் செய்தி நிறுவனமும் பரப்பி வருவதால், தன்னைப் பற்றிய அவதூறு கருத்துகளை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும் இயக்குநர் சுசி கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுசி கணேசன் தரப்பில், லீனா மணிமேகலைக்கு எதிராகத் தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், தன்னைப் பழிவாங்கும் நோக்கத்துடன் லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணையவுள்ள நிலையில் திரைத்துறையில் தனது நற்பெயரைக் கெடுக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், தி நியூஸ் மினிட் நிறுவனங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x