Published : 20 Jan 2022 07:28 AM
Last Updated : 20 Jan 2022 07:28 AM

கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் இடஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் என இரண்டையும் வழங்க எந்ததடையும் இல்லை என்று சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு சாராத மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ். போன்ற முதுகலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் என இரண்டையும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்பில் 1,968 இடங்கள் உள்ளது என்றால், அதில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிடும். எஞ்சிய 984 இடங்களில் 50 சதவீத ஒதுக்கீடு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு மேலும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்குவதால், எஞ்சிய இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது. எனவே, 50 சதவீதம் இடஒதுக்கீடு அல்லது 30 சதவீத ஊக்க மதிப்பெண் இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘அரசு மருத்துவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொலைதூர கிராமப்புறங்கள், மலைக் கிராமங்கள், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் மக்களின் நலனுக்காகப் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இடஒதுக்கீடு தவிர்த்து ஊக்க மதிப்பெண் வழங்குவதில் எந்த தவறும் இல்லை’’ என்று வாதிட்டனர்.

இதையடுத்து, ‘‘கிராமப்புறங் களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு இந்த இரு சலுகைகளையும் வழங்க எந்த தடையும் இல்லை. அதேபோல, பொதுப் பிரிவில் அவர்கள் பங்கேற்கவும் எந்த தடையும் இல்லை’’ என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அரசு மருத்துவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொலைதூர கிராமப்புறங்களில் பணிபுரிகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x