Published : 19 Jan 2022 07:01 PM
Last Updated : 19 Jan 2022 07:01 PM

மழை நீர் பிரச்சினைக்குத் தீர்வு காண நிபுணர் குழு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னையில் மழை நீர் தேங்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஜி.எஸ்.மணி தாக்கல் செய்திருந்த மனுவில், சென்னை முழுவதும் கடந்த நவம்பர் இறுதி வாரம் பெய்த பருவமழையால் 523 இடங்களில் தண்ணீர் தேங்கியது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, சரிசெய்யாவிட்டால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

உயர் நீதிமன்ற எச்சரிக்கைக்குப் பிறகும், அதிகாரிகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால்தான் டிசம்பர் 30ஆம் தேதி பெய்த கனமழையால் மீண்டும் சென்னையில் தண்ணீர் தேங்கியது. மழை நீர் வடிகாலுக்கான முறையான நடைமுறையை சென்னை மாநகராட்சி பின்பற்றவில்லை. இதனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்விலும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே சென்னையில் மீண்டும் மழை நீர் தேங்காத வகையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நிபுணர் குழு அமைக்க வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அனிதா ஆஜராகி, இதேபோன்ற மற்றொரு வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 3ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x