கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்.8 முதல் மீண்டும் முன்பதிவில்லா இருக்கை வசதி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோவை: கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் பிப்வரி 8-ம் தேதி முதல் மீண்டும் முன்பதிவில்லா இருக்கை வசதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, ரயில்களில் முன்பதிவில்லாமல் இருக்கை வசதியை அளிக்க முடியாத நிலை இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளதால், ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா இருக்கை வசதி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு கோவை வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் - கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:12678) 4 பெட்டிகள் நாளை (ஜன.20) முதல் முன்பதிவில்லா பெட்டிகளாக இயக்கப்படும்.

இதுதவிர, கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:22616), வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் 6 பெட்டிகள் முன்பதிவில்லா பெட்டிகளாக இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அந்த பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை, டிக்கெட் கவுன்ட்டரில் பெற்று பயணிக்க முடியும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in