Published : 19 Jan 2022 11:30 AM
Last Updated : 19 Jan 2022 11:30 AM

கரோனா மூன்றாம் அலை உச்சம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க முறையீடு - ஜன.22-ல் விசாரணை

சென்னை: கரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது எனக் கோரிய தமிழக அரசின் முறையீட்டு மனு ஜனவரி 22-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 2,000 முதல் 3,000 வரை அதிகரித்து வருகிறது. தேர்தலை நடத்தினால் கரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். மார்ச் மாதத்திற்குப் பிறகு கரோனா பாதிப்பு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதால் மார்ச் மாதத்திலோ அல்லது மார்ச் மாத இறுதியிலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுவதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு முடிவு குறித்து எந்நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக எடுக்க பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் அமர்வு நாளை மறுநாள் அதாவது 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஜனவரி 27-ம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்து இருந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான வழக்கு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x