Published : 19 Jan 2022 07:44 AM
Last Updated : 19 Jan 2022 07:44 AM

எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர் இடையே கோஷ்டி பூசல்; தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பதவிகளின் சீட் யாருக்கு? - ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தும் திமுக தலைமை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் இடங்களுக்கு யாருக்கு சீட் வழங்குவது என்பது குறித்து திமுக தலைமை ரகசிய கருத்துக்கணிப்பு எடுத்து வருகிறது.

தாம்பரம் மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையமும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன. தற்போது மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், 70 வார்டுகள் கொண்ட தாம்பரம் மாநகராட்சியில் 35 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு தொடர்பாகவும் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

இதற்கிடையில், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இடையே கோஷ்டிப் பூசல் நிலவிவருகிறது. இவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு கவுன்சிலர் சீட்பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அனைவரும் திமுக தலைமையிடம் முறையிட்டு வருகின்றனர். சீட்டை வாங்கப் பலர் பல லட்சம் வரை தர முன்வந்திருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் திமுக தலைமை ரகசியமாக நிர்வாகிகளைச் சந்தித்து கருத்துக்கணிப்பு எடுத்துவருகின்றது. யாருக்கு சீட் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ரகசியமாகச் சேகரிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “தாம்பரத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவருக்குச் செல்வாக்கு உள்ளது. மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தா.மோ. அன்பரசனுக்கும், 2 எம்எல்ஏக்களுக்கும் இடையே கோஷ்டி பூசல் உள்ளது. இவைதவிர தாம்பரம் எம்எல்ஏ டி.ஆர்.பாலுவையும், பல்லாவரம் எம்எல்ஏ ஆர்.எஸ்.பாரதியையும் நம்பியுள்ளனர். அமைச்சர் அன்பரசன் அவருடைய மகனுக்குத் துணை மேயர் கேட்க விரும்புகிறார். தாம்பரம் மாநகராட்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மண்டலக் குழு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக அன்பரசன் 5 மண்டலமாகப் பிரிக்க வலியுறுத்தி வருகிறார்.

எஸ்.ஆர்.ராஜா தன்னுடைய மைத்துனர் காமராஜுக்கும், இ.கருணாநிதி தனது அண்ணன் ஜோசப்புக்கும், அமைச்சர் அன்பரசன் மகன் தமிழ் மாறனுக்கும், ஜெகத்ரட்சகன் மைத்துனர் காமராஜருக்கும் துணை மேயர் பதவி கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அதனால்தான் கட்சித் தலைமை ரகசியமாக நிர்வாகிகளைச் சந்தித்து கருத்துக்கணிப்பு எடுத்து வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகளைக் கேட்டறிந்து, யாருக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெறுவார்கள் என்பது உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. மக்களுக்குச் சேவை செய்யும் நபர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x