

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நெய்வேலி திட்டங்களுக்கு, தங்கள் நிலங்களை வழங்கியவர்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான புதிய கொள்கையை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காணொலிக் காட்சி மூலம் வெளியிட்டார்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நெய்வேலி திட்டங்களுக்கு, தங்கள் நிலங்களை வழங்கியவர்களுக்கு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான புதிய கொள்கையை நெய்வேலி லிக்னைட் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காணொலிக் காட்சி மூலம் வெளியிட்டார். அப்போது பேசிய மத்திய அமைச்சர், “கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலக்கரித் துறை அமைச்சகத்தின் என்எல்சி இந்தியா நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வாய்ப்புக்களை அளிக்கும் மிக இலகுவான மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்கிய என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டுகிறோம்.
பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் இழப்பீட்டை இந்த புதிய மறுவாழ்வுக் கொள்கை உறுதி செய்துள்ளது. புதிய கொள்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகள் அதிகளவில் உள்ளன. ‘திறன் இந்தியா’ திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க தமிழக அரசுடன் என்எல்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
நிலையான வாழ்வாதாரத்திற் கும், ஒவ்வொரு கிராமத்தையும் தற்சார்புடையதாக மாற்றவும் இந்த புதிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றக் கொள்கை வழிவகுக்கும்.
கிராம மக்களுக்கு பயனளிப்ப தோடு, என்எல்சி நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த புதிய கொள்கை வழிவகுக்கும்”என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழக வேளாண் மற்று உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராகேஷ்குமார், இயக்குநர்கன் விக்ரமன், ஷாஜிஜான்,ஜெயக்குமார் சீனிவாசன், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி சந்திரசேகரன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், எம்எல்ஏக்கள் சபா ராஜேந்திரன்,வேல்முருகன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.