Published : 19 Jan 2022 09:41 AM
Last Updated : 19 Jan 2022 09:41 AM

புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சம் - 2 ஆயிரத்தை தாண்டியது கரோனா தினசரி பாதிப்பு: இளம்பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

3-வது அலை கரோனா தொற்றில் புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இளம்பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய் பரவல் தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் நேற்று வெளியிட்ட தகவல் விவரம் வருமாறு:

புதுச்சேரி மாநிலத்தில் 6,028 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 1,715, காரைக்கால்- 279, ஏனாம்- 54, மாஹே- 45 என மொத்தம் 2,093 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த 81 வயது முதியவர், சாந்தி நகர் 32 வயது இளம் பெண் ஆகிய இருவரும் ஜிப்மர் மருத்துவமனையிலும், காரைக்கால் வெள்ளாளர் நகரைச் சேர்ந்த 59 வயது முதியவர் காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,893 ஆக உயர்த்துள்ளது. இறப்பு விகிதம் 1.35 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்து 710 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 72 பேர், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 42 பேர் என 114 பேர் புதுச்சேரியிலும், காரைக்காலில் 27 பேரும், ஏனாமில் 6 பேரும், மாஹேவில் 16 பேரும் என 163 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 10,230 பேர் என மொத்தமாக 10 ஆயிரத்து 393 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 256 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் தொற்றில் பாதிக்கப்பட்டு, குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 424 (91.27 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 20 லட்சத்து 99 ஆயிரத்து 294 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 17 லட்சத்து 77 ஆயிரத்து 437 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9 லட்சத்து 9 ஆயிரத்து 544 பேருக்கும், 2வது டோஸ் 5 லட்சத்து 90 ஆயிரத்து 824 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 2,987 பேருக்கும் என மொத்தம் 15 லட்சத்து 3 ஆயிரத்து 355 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 5,511 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை செயலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 மாதங்களுக்குப் பின்..
“புதுச்சேரியில் கடந்தாண்டு (2021) மே 11-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2,049 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவே தினசரி பாதிப்பின் புதிய உச்சமாக இருந்தது. தற்போது சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 2,093 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டுக்கொள்வது உள்ளிட்ட விதிமுறைகளை ஒவ்வொருவரும் கடைபிடிப்பது அவசியம். அவ்வாறு கடைபிடித்தால் மட்டுமே கரோனா தொற்றில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும்’’ என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x