Last Updated : 18 Jan, 2022 05:35 PM

 

Published : 18 Jan 2022 05:35 PM
Last Updated : 18 Jan 2022 05:35 PM

புதுச்சேரியில் உச்சம்; 2 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா தினசரி பாதிப்பு: இளம்பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இளம்பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார் இன்று (ஜன.18) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,028 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 1,715, காரைக்கால்- 279, ஏனாம்- 54, மாஹே- 45 என மொத்தம் 2,093 (34.72 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த 81 வயது முதியவர், சாந்தி நகர் 32 வயது இளம்பெண் ஆகிய இருவரும் ஜிப்மர் மருத்துவமனையிலும், காரைக்கால் வெள்ளாளர் நகரைச் சேர்ந்த 59 வயது முதியவர் காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,893 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.35 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்து 710 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 72 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 42 பேரும் என 114 பேர் புதுச்சேரியிலும், காரைக்காலில் 27 பேரும், ஏனாமில் 6 பேரும், மாஹேவில் 16 பேரும் என 163 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 10,230 பேர் என மொத்தமாக 10 ஆயிரத்து 393 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 256 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 424 (91.27 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 20 லட்சத்து 99 ஆயிரத்து 294 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 17 லட்சத்து 77 ஆயிரத்து 437 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9 லட்சத்து 9 ஆயரித்து 544 பேருக்கும், 2-வது டோஸ் 5 லட்சத்து 90 ஆயிரத்து 824 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 2,987 பேருக்கும் என மொத்தம் 15 லட்சத்து 3 ஆயிரத்து 355 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் 5,511 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ‘‘புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு மே 11-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 2,049 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவே தினசரி பாதிப்பின் உதிய உச்சமாக இருந்தது. தற்போது சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 2,093 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, தடுப்பூசி போட்டுக்கொள்வது உள்ளிட்ட விதிமுறைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு கடைப்பிடித்தால் மட்டுமே கரோனா தொற்றில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும்’’ என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x