Published : 18 Jan 2022 06:23 AM
Last Updated : 18 Jan 2022 06:23 AM

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு அமித் ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க கோரி மனு அளித்தனர்

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த குழுவினர் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.

சென்னை: நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பான மனுவை அளித்தனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், கடந்த செப்.13-ல் சட்டப்பேரவையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இதை சுட்டிக்காட்டி, குடியரசுத் தலைவரை தமிழக எம்பிக்கள் கடந்த டிச.28-ல் சந்திக்க முயற்சித்தனர். எனினும், சந்திப்பு நடைபெறாததால், அவரது அலுவலகத்தில் நீட் தேர்வுதீர்மானம், ஆளுநர் அனுப்பாதது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மனு ஒன்றை அளித்தனர். அந்த மனு அன்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து மறுநாள், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க எம்பிக்கள் குழுவினர் முயற்சித்தனர். முடியாத நிலையில், தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், ஜன.8-ல் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மீண்டும் ஒருமுறை மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மனு அளிப்பது என்றும், சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று நேரம் ஒதுக்கினார். இதையடுத்து, டி.ஆர்.பாலுதலைமையில், வைகோ (மதிமுக) நவநீத கிருஷ்ணன் (அதிமுக), ஜெயக்குமார் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), டி.ராமச்சந்திரன் (சிபிஐ), பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்), ரவிக்குமார் (விசிக) ஆகியோர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேற்று மாலை சந்தித்து, நீட்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பான மனுவையும், தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் உள்ளிட்டவை தொடர்பான மனுக் களையும் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x