

விஐடி பல்கலைக்கழகத்தில் கல்வி பயில நடத்தப்படும் நுழைவுத் தேர்வை (VITEEE) எழுத 2.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது ஒரு சாதனை அளவாகும் என்று அந்த பல்கலை. தெரிவித்துள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்காக 2,02,406 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இது மேலும் அதிகரித்துள்ளது. தற்போது 2,12,238 பேர் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக விஐடி பல்கலை. நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி.விசுவநாதன் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:
இங்கு படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதனால் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் இங்கு படிக்க விரும்புகின்றனர். குறிப்பாக வட இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மிகவும் விரும்புகின்றனர்.
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு வரும் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள 118 மையங்களில் கணினி மூலம் தேர்வு நடத்தப்படும். மேலும் துபை, குவைத், மஸ்கட் உள்ளிட்ட இடங்களிலும் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் >www.vit.ac.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்.
தேர்ச்சி பெறுபவர்களுக்கு அவர்களின் ரேங்க் அடிப்படையில் மே மாதம் 9 முதல் 12-ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும்.
விஐடி பல்கலை.யில் தகுதியுடைய மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மத்திய, மாநில அரசு தேர்வுகளின் முதலிடம் பெறுபவர்களுக்கு அவர்கள் படிக்கும் 4 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'ஸ்டார்ஸ்' திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட் டத்திலும் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டு கல்விக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம் தள்ளுபடி செய் யப்படும்.
இவ்வாறு வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.