

சென்னை: சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பட்டியலினப் பெண்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் சென்னை மாநகராட்சியும், தாம்பரம் மாநகராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி பட்டியலினத்தைச் சேர்ந்த ( ஆண்/பெண்) மட்டுமே போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கடலூர் மாநகராட்சி, திண்டுக்கல் மாநகராட்சி, வேலூர் மாநகராட்சி, கரூர் மாநகராட்சி, சிவகாசி மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி,மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஈரோடு மாநகராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.