

சென்னை: "நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி உயிரிழந்திருப்பது குறித்து காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. காவல் துறையினர் தாக்கியதே மாற்றுத்திறனாளியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஜனவரி 8-ம் தேதி கைது செய்யப்பட்ட பிரபாகரன் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படாமல் சேந்தமங்கலம் காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக வைத்து தாக்கப்பட்டிருக்கிறார். அதனால், சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் பிரபாகரனுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போதுமானதல்ல. பிரபாகரனின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.