Published : 17 Jan 2022 10:29 AM
Last Updated : 17 Jan 2022 10:29 AM

பிரதமர் மோடியை பகடி செய்வதா?- தனியார் சேனல் பகிரங்க மன்னிப்பு கோர பாஜக வலியுறுத்தல்

சென்னை: பிரதமர் மோடியை பகடி செய்ததாக தனியார் சேனலிடம் மன்னிப்பு கோரும்படி பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநில பாஜக ஐடி பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் பிரதமர் மோடியை பகடி செய்தனர். அவர் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் ஆடைகள், தனியார்மயமாக்குதல் கொள்கை ஆகியனவற்றை விமர்சித்து சிறுவர்கள் பேசி நடித்தனர். 10 வயதே நிரம்பிய அந்த சிறாருக்கு நிச்சயமாக அவர்கள் பேசியதன் அர்த்தம் தெரிந்திருக்காது. இது தவறான செய்தியைக் கடத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த அத்தியாயத்தை சேனல் திரும்பப் பெற வேண்டும். அத்துடன் பொது மன்னிப்பும் கோர வேண்டும். சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளை அரசியல் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தக்கூடாது. எங்களது மவுனம் நாங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதாகக் கருதப்படக்கூடாது.

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை டேக் செய்து அவர் இந்த ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார்.

அதற்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் கேள்வி: இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கி பாஜக நாசி கொள்கையுடன் நடந்து கொள்வதாகக் கண்டித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடவடிக்கை யார் மீது? எடுத்தவர் மீதா?, நடித்தவர் மீதா? அல்லது அதை பார்த்து சிரித்தவர் மீதா?@BJP4India = Nazi" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் ரீதியாகவும் பாஜகவும், காங்கிரஸும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x