ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு

ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கோணாப்பட்டு கிராமத்தைச் சேர்ந் தவர் பெருமாள்(53). இவரது மகன் வெற்றிவேல்(18). இவர், நாட்றம்பள்ளி வட்டம் அக்ரகாரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 2-ம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக் படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மேல் அச்சமங்கலம் பெரிய ஏரிக்கரை அருகே உள்ள தனது விவசாய நிலத்தில், நிலத்துக்கு தண்ணீர் இறைக்க மின் மோட்டார் போட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வெற்றிவேல் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் துாக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார்.

மின்மோட்டார் இயக்க சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வராததை அறிந்த அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வெற்றிவேல் மீது மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே வெற்றிவேலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் உயிரிழந்தார்.இது குறித்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in