Last Updated : 20 Apr, 2016 07:09 PM

 

Published : 20 Apr 2016 07:09 PM
Last Updated : 20 Apr 2016 07:09 PM

காட்டுமன்னார் கோவில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மணிரத்னம் களம் இறங்குகிறார்

காட்டுமன்னார் கோவில் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மணிரத்னம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தினந்தோறும் செய்திக்குள்ளானவர் தொழிலதிபர் மணிரத்னம். காங்கிரஸில் சீட் பெற முயற்சித்து, அப்போது சீட் கிடைக்காத விரக்தியில் பாமகவில் இணைந்து, வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அந்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டு, பின்னர் அவரது மனைவி தேர்தல் களம் கண்டார். தேர்தல் என்றாலே பெரும் போராட்டத்தை சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர் மணிரத்னம்.

ஓராண்டு அமைதியாக இருந்த மணிரத்னம்,தன்னை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு, காட்டுமன்னார்கோயில் தனித் தொகுதியை மையப்படுத்தி தனது அரசியல் பணியை மேற்கொண்டார். வெள்ள நிவாரணப்பணிகளிலும், தேர்தல் மையப்படுத்திய பணிகளிலும் ஈடுபாடு காட்டி தன்னை வாக்காளர்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டார்.

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காட்டுமன்னார்கோயில் தனி தொகுதி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து எப்பாடுபட்டாவது வேட்பாளராகிவிடவேண்டும் என காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக்கை சுற்றியதன் விளைவாக, ஒருவழியாக காட்டுமன்னார் கோவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். பெரும் போராட்டத்துக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளர் என்ற அங்கீகாரம் கிடைத்ததையே முதல் வெற்றியாக கருதுகிறார் மணி.

தேர்தலுக்கும் மணிரத்னத்துக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதே அவருக்கு தொகுதி மக்களிடையே அவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்து வேட்புமனு தாக்கலில் முன்பு ஏற்பட்ட தவறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x