Published : 19 Apr 2016 07:35 AM
Last Updated : 19 Apr 2016 07:35 AM

மிஸ் கூவாகம் போட்டியில் திருநங்கைகள் உற்சாகம்

விழுப்புரத்தில் நேற்று நடந்த மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மாலை திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. திருநங்கைகள் பூசாரி மூலம் தாலி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் கும்மியடிப்பார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கூவாகத்துக்கு திருநங்கைகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதையொட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு மிஸ் கூவாகம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை தமிழ் மாநில 36 மாவட்டங்களின் திருநங்கை ஜமாத் தலைவிகள் நடத்தினர். சென்னையை சேர்ந்த மேம்பாட்டு அறக்கட்டளை ஒன்றின் இயக்குநர் கே. அருணா வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நல சங்கத் தலைவி ராதாம்மாள் முன்னிலை வகித்தார். திருச்சியில் உள்ள அகில இந்திய அரவாணிகள் உரிமை, மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த மோகனாம்பாள் தலைமை வகித்தார். வேலூர் திருநங்கை அரளியின் சிறப்பு நடனம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக. நடிகை அனுராதா, நடிகர் எம்.எஸ். பாஸ்கர், பின்னணி பாடகர் வேல்முருகன், பின்னணி பாடகி சின்னபொண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மிஸ் கூவாகம் போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் பாட்டு, நடனம், பொது அறிவு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் கலந்துகொண்ட திருநங்கைகள் ஒய்யாரமாய் வலம் வந்தனர். விழா நடைபெறும் இடத்தில் திருநங்கைகள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x