Published : 13 Jan 2022 07:03 PM
Last Updated : 13 Jan 2022 07:03 PM

கரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசுக்கு தமிழகம் துணை நிற்கும்: பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: கரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழகம் துணை நிற்கும் என்று உறுதியளிப்பதாக பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "கரோனா தொற்று நோயின் ஒமைக்ரான் அலையை நிர்வகிக்க தமிழகம் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளது. எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, தடுப்பூசி செலுத்துவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று வரை, தகுதியுள்ளவர்களில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது.

கரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அனைத்து நகரங்களிலும் கரோனா பராமரிப்பு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட சோதனை விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மட்டுமே பயன்படுத்துப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் உற்பத்தி திறன், ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. .

கரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன். நிலைமையைச் சமாளிக்க அனைத்து அரசு இயந்திரமும் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. இந்த கரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு.ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர் பி. செந்தில்குமார் இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x