Published : 13 Jan 2022 06:22 PM
Last Updated : 13 Jan 2022 06:22 PM

சென்னையில் கடந்த போகியை விட காற்று மாசின் அளவு குறைந்தது: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வின்படி காற்று தரக் குறியீடு மாசின் அளவு (Air Quality Index) கடந்த போகிப் பண்டிகையை விட நடப்பாண்டு (2022) மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நமது முன்னோர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கையோடு இயைந்து, கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள் மற்றும் தேவையற்ற விவசாயக் கழிவுகள் ஆகியவற்றைத் தீயிட்டு கொளுத்திக் கொண்டாடுவது பண்டிகையின் மரபாகும்.

அதீத நகரமயமாதலால் சென்னை போன்ற பெருநகரங்களில் தற்பொழுது போகிப் பண்டிகையின்போது டயர், டியூப், ரப்பர் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் ஏற்படும் புகை மற்றும் மாசால், வயதானவர்கள் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இத்தகைய மாசு, சுவாச நோய், இருமல், கண் எரிச்சல் மற்றும் நுரையீரல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் புகை மூட்டத்தினால் போக்குவரத்து தடைப்படுவதுடன் விபத்துகளும், விமானப் போக்குவரத்தில் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

நவீன யுகத்தில் எல்லாப் பொருட்களையும் மறுசுழற்சி செய்து வருமானம் ஈட்டும் விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் போகி தினத்தன்று ரசாயனப் பொருட்களை எரித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதைத் தவிர்த்து புகையில்லா போகியைக் கொண்டாடுவது நமது அனைவரது கடமையாகும். இதன் அடிப்படையில் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 19 ஆண்டுகளாக போகிப் பண்டிகைக்கு முன்பு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது வெகுவாகக் குறைந்துள்ளது.

அதன்படி நடப்பாண்டில் (2022) போகிப் பண்டிகையின்போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகர மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டத் தலைமையிடங்களிலும் 11.01.2022 அன்று முதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சென்னை பெருநகர மாநகரத்தில் உள்ள 15 மண்டலங்களிலும் இரண்டு நாட்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் மற்றும் பிரச்சார வாகனங்களில் ஒலிபெருக்கி வாயிலாகவும், நடமாடும் காணொலிக் காட்சி வாகனத்தின் மூலமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பிரச்சார ஊர்திகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

போகிப் பண்டிகையின்போது சென்னை பெருநகர மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினைக் கண்காணிப்பு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வகத்தின் மூலம் போகிப் பண்டிகையின் முந்தைய நாள் (10.01.2022–11.01.2022) மற்றும் போகிப் பண்டிகை (12.01.2022–13,01,2022) அன்று 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுத் தரத்தினைக் கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் காற்றின் தர அளவுகளை வாரிய இணையதளத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி 12.01.2022 காலை 8 மணி முதல் 13.01.2022 காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்ததில், காற்றில் கலந்துள்ள கந்தக-டை-ஆக்ஸைடு, மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு அனைத்து 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவான 80 மைக்ரோகிராம்/ கனமீட்டருக்கு உட்பட்டு இருந்தது.

காற்றில் கலந்துள்ள (PM2.5) நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 18 மைக்ரோகிராம்/கனமீட்டர் முதல் அதிகபட்சமாக 54 மைக்ரோகிராம்/ கனமீட்டர் வரை இருந்தது. (நிர்ணயிக்கப்பட்ட PM2.5 தர அளவு 60 மைக்ரோகிராம்/ கனமீட்டர்). மேலும், காற்றில் கலந்துள்ள (PM10) நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 45 மைக்ரோகிராம்/ கனமீட்டர் முதல் 91 மைக்ரோகிராம்/ கனமீட்டர் வரை இருந்தது. (நிர்ணயிக்கப்பட்ட PM10 தர அளவு 100 மைக்ரோகிராம்/ கனமீட்டர்).

காற்று தரக் குறியீடு (Air Quality Index) பொருத்தமட்டில் குறைந்தபட்சமாக தேனாம்பேட்டையில் 61 ஆகவும் (திருப்திகரமான அளவு) அதிகபட்சமாக மாதவரத்தில் 91 ஆகவும் (திருப்திகரமாண அளவு) இருந்தது அறியப்பட்டது. கடந்த ஆண்டு (2021) போகிப் பண்டிகையின்போது காற்று தரக் குறியீட்டு அளவுகள் சென்னை பெருநகர மாநகராட்சியின் பதினைந்து மண்டலங்களில் 12 மண்டலங்களில் மிதமான அளவுகளிலும் மீதமுள்ள 3 மண்டலங்களில் மோசமான அளவுகளாக இருந்தது. நடப்பாண்டில் (2022) போகிப் பண்டிகையின்போது சென்னை பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் காற்று தரக் குறியீடு திருப்திகரமான அளவுகளிலேயே இருந்தது என்று கண்டறியப்பட்டது. (காற்று தரக் குறியீட்டு அளவு 51 முதல் 100 வரை).

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை விமான நிலையம், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதி மக்களுக்குக் குப்பைகளை எரிக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்ததின் பெயரில் பொதுமக்கள் பெருமளவு குப்பைகளையோ அல்லது பிளாஸ்டிக் கழிவுகளையோ எரிக்கவில்லை. எனவே, விமானப் போக்குவரத்து தடைப்படவில்லை. சென்னை மாநகரில் இன்று (13.01.2022) குறைந்த ஈரப்பதம், மிதமான வெப்பநிலை, மிதமான காற்றின் வேகம் காரணமாக புகை மண்டலம் அதிகமாகத் தென்படவில்லை. இதனால் தொலைதூர காணும் தன்மை (Visibility) நன்றாக இருந்ததால், விமானப் புறப்பாடு மற்றும் வருகைப் போக்குவரத்தில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என அறியப்பட்டது.

தமிழக அரசின் கரோனா கட்டுப்பாட்டு அறிக்கையின்படி தமிழகத்தில் கடந்த 06.01.2022 நாள் அன்று முதல் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக அளவு வெளியில் வராத காரணத்தால் போகிப் பண்டிகையின்போது மாசின் அளவு கடந்ந ஆண்டை (2021) விட நடப்பாண்டு (2022) வாரியத்தின் ஆய்வின்படி காற்று தரக் குறியீடு மாசின் அளவு (Air Quality Index) மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளது, இந்த அளவு மாசு அளவு குறைந்ததற்கு பொதுமக்களிடையே இருந்த விழிப்புணர்வும், டயர், டியூப், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்காமல் ஒத்துழைப்பு தந்ததும் முக்கியக் காரணமாகும். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசு துறையினருக்கும், அரசுசாரா அமைப்பினருக்கும், குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கும், செய்தி மற்றும் ஊடகங்களுக்கும் குறிப்பாக பொதுமக்களுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x