

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆத்தூர் கூலமேட்டில் வரும் 17-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில், 1,000 பார்வையாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என விழாக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆத்தூர் அடுத்த கூலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது வழக்கம். இதில், பங்கேற்க சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காளைகளை மாடு வளர்ப்போர் அழைத்து வருவர்.
மேலும், காளைகளை அடக்க சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து, மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர்.
தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூலமேட்டில், வரும் 17-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதையொட்டி, ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் மாடங்கள், காளைகளை வரிசைப்படுத்தி நிற்க வைப்பதற்கான பாதை உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. போட்டியில் பங்கேற்க காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப் படுத்தி உள்ள நிலையில், கூலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தொடர்பாக ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, கூலமேட்டில் ஆய்வு மேற்கொண்டு, விழாக்குழுவினரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, கரோனா கட்டுப் பாடு காரணமாக 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் உள்ளூர் பார்வை யாளர்கள் 150 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
விழா குழுவினர் கூறும்போது, “அரசின் வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி போட்டி நடத்துவோம். தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் நெகட்டிவ் சான்றிதழுடன் 1,000 பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.